திரைப்பட இயக்குனரும், நடிகருமான கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார்..!

திரைப்பட இயக்குனரும், நடிகருமான கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. இசைக் காவியங்களை இயக்கி ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவரை பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு..

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் விஸ்வநாத். மெட்ராஸ் ஸ்டூடியோக்களில் சவுண்ட் எஞ்ஜினியராகப் பணியாற்றி பாதாள பைரவி படத்தின் மூலம் திரைப்பட உதவி இயக்குனரானார்.

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 53 படங்களை இயக்கியுள்ளார்.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற தமிழ்த் திரைப்படங்களையும் இயக்கியவர் கே.விஸ்வநாத்.

சர்கம், காம்சோர், Jaag Utha Insaan போன்றவை அவர் இயக்கிய இந்திப் படங்களாகும்.

ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்த விஸ்வநாத், தமிழில் யாரடி நீ மோகினி, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

திரையுலகில் அவர் அளித்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர் கே.விஸ்வநாத்.

வயது மூப்பு உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. கே.விஸ்வநாத் மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.