திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே மையில் பகுதியை சேர்ந்தவர் பிரஜித் (32). அவரது மனைவி ரீஷா (26). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் ரீஷா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரீஷாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரீஷாவை பிரஜித் காரில் அழைத்து சென்றார். அவர்களுடன் மூத்த மகள் ஸ்ரீபார்வதி உள்பட மேலும் 4 பேர் காரில் சென்றனர். காரை பிரஜித் ஓட்டிச் சென்றார். கண்ணூர் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது காரின் முன்புறம் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் மளமளவென தீ எரியத் தொடங்கியது. இதில் பிரஜித், ரீஷா உடல் கருகி பலியாயினர். பின் இருக்கையில் இருந்த குழந்தை உள்பட 4 பேரும் வெளியே குதித்து தப்பினர்.