#ராணிப்பேட்டை: கபடி போட்டி நடத்த தடையில்லை; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஜாகீர் தண்டலம் கண்டிகை கிராமத்தில் உள்ள வெற்றியின் சிகரம் கபடி குழுவினர் சார்பில் எம்.ஜீவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில் “கடந்த ஜனவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி கோரி நெமிலி காவல் ஆய்வாளரிடம் ஜனவரி 25ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. 

கபடி போட்டி நடத்த நெமிலி காவல் ஆய்வாளர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக கபடி போட்டி நடத்த முடியாத சூழல் உண்டாகியுள்ளது. எனவே அனுமதி வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவின் விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவல்துறையில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “கடந்த ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாததால் சில வீரர்கள் காயம் அடைந்தனர்.

மேலும் கொரோனா பரவல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டது” என வாதிட்டார். இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி “பொதுமக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பரவல் குறித்து அரசின் அறிவிப்பு ஏதும் தற்பொழுது நடைமுறையில் இல்லை. 

சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் காவல்துறையினர் தரப்பிலிருந்து சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் காயம் ஏற்படுகிறது என்ற காரணத்திற்காக கபடி போட்டி விளையாடுவதை தவிர்க்க முடியாது. 

எனவே கபடி போட்டிகளை நடத்த அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்தும், விளையாட்டு வீரர்கள் காண போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மாற்று தேதியில் போட்டிகளை நடத்த அனுமதி கோரி புதிய மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிடுகிறேன். அந்த மனு மீது உரிய உத்தரவுகளை பிறப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன்” எனக் கூறி நீதிபதி சந்திரசேகரன் வழக்கை முடித்து வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.