சிவகாசி: சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் சரவணன் மீது சிவகாசி டிஎஸ்பி இடம் புகார் அளித்தார்.
சிவகாசி மாநகராட்சியில் 10-வது அதிமுக கவுன்சிலர் சாந்தி. இவரது கணவர் சரவணகுமார். இவர் அதிமுக பகுதி செயலாளராக உள்ளார். திருத்தங்கல் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து 10 மற்றும் 19-வது வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 19-வது வார்டுக்கு குடிநீர் வழங்க எதிர்த்த சரவணகுமார், குடிநீர் செல்லும் வழியை அடைத்து வைத்தார். குடிநீர் வராதது குறித்து 19-வது வார்டு பொதுமக்கள் அளித்த புகாரில் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா, பொறியாளர் சாகுல் ஹமீது, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஆய்வு செய்தனர். அப்போது தொட்டியில் தேவையான அளவு நீர் இருப்பு இருந்ததால் 19-வது வார்டுக்கு குடிநீர் திறந்து விடுமாறு ஆணையர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் சாந்தியின் கணவர் சரவணகுமார் ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயனிடம் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். புகார் தொடர்பாக ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது, ‘தண்ணீர் பிரச்சினை குறித்து மேயர், துணை மேயருக்கு ஆய்வுக்கு சென்ற போது, அதிமுக கவுன்சிலர் சரவணகுமார் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். ஆணையருக்கு இந்த நிலை என்றால் மாநகராட்சியில் சாதராண அதிகாரிகள் உயிர் பயத்துடன் பணியாற்றும் சூழல் உள்ளது” என்றார்.