துருக்கி நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வு.!

துருக்கி – சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கஹ்ராமன்மராஸ், அதியமான், மாலதியா, தியார்பகிர் உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மாலதியாவில் உள்ள 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி பகுதியளவு சேதமடைந்துள்ளது. துருக்கியில் கடந்த 100 ஆண்டுகளில் காணாத மிக மோசமான நிலநடுக்கம் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்து உள்ளார்.

மேலும் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை துருக்கி மற்றும் சிரியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. இந்தநிலையில் துருக்கியில் பாதிக்கப்பட்டோரை மீட்க மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருட்களுடன் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மீட்பு உதவிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களைக் கொண்ட தேசிய மீட்பு படையின் இரண்டு குழுக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பத் தயாராக உள்ளன என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் மருத்துவக் குழுக்கள் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன. அத்தியவசிய மருந்துகளை துருக்கி அரசாங்கம் மற்றும் இந்திய தூதரகம் வழியாக மக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2300 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மூன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1939ம் ஆண்டிற்கு பிறகு நடந்து மிகப்பெரிய இயற்கை பேரிடர் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டிற்கு உதவ 40 நாடுகள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.