பெங்களூரு: மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று கூறியதாவது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதைபடிவமற்ற எரிபொருட்களுக்கு மாற்றத்தை அடைவதில் இந்தியா 5 முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிபொருட்கள் மூலம் 40 சதவீத உற்பத்தி திறனை அடைவதற்கு இலக்கு நிர்ணயித்தோம். இருப்பினும், அந்த இலக்கினை 2020 நவம்பரில் முன்னதாகவே எட்டிவிட்டோம்.
தற்போது, 500 ஜிகாவாட் மின் உற்பத்தியை எட்டுவதற்கு பிரதமர் மோடி உயரிய இலக்கை நிர்ணயித்துள்ளார். இது, 2030-ம் ஆண்டிற்குள் நமது எரிபொருள் தேவைக்கான திறனில் 50 சதவீதமாக இருக்கும்.
மின்சாரச் சட்டம் 2003-ஐ திருத்துவதன் மூலமாக கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் மின்சார விநியோக நிறுவனங்களை (டிஸ்காம்ஸ்) தனியார்மயமாக்குவதற்கு அல்ல. மாறாக அந்த துறையில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமதாரர்களை அனுமதிப்பதன் மூலமாக போட்டித்தன்மை அதிகரிக்கச் செய்து மலிவான விலையிலான மின்சாரம் அனைத்து நுகர்வோருக்கும் கிடைக்கச் செய்வதே முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.