மீட்பு பணிக்காக NDRF உடன் துருக்கி சென்ற நாய்கள் படை.. இந்தியா அனுப்பிவைப்பு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் துருக்கி மற்றும் சிரிய நாடுகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிலிருந்து 101 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்திருக்கிறது. இந்த குழுக்களில் நான்கு நாய்கள் படைகளும் இணைந்திருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 6ம் தேதியில் இருந்து துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நொடிப்பொழுதில் கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணி அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் எட்டாயிரம் பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையும், மருத்துவ குழுவும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு விரைந்திருக்கிறது. இந்த குழுவில் மீட்புப்பணிக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட நான்கு லாப்ரடார் நாய்களும் இணைந்திருக்கின்றன.
ஜூலி, ரோமியோ, ஹனி மற்றும் ராம்போ ஆகிய அதி திறன் கொண்ட நாய்களுடன் இணைந்து மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகளை மேற்கொள்வார்கள். 2011ம் ஆண்டு ஜப்பானில் நடந்த 3 பேரழிவுகளின் போதும், 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும் இந்திய தேசிய பேரிடர் மீட்பு படை உலகளவில் பாராட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.