மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பி.எம். பார்மசி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா (50). நேற்று மாலை கல்லூரி பணிகளை முடித்து விட்டு மாலை 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 24 வயது இளைஞன், முதல்வரிடம் வாக்குவாதம் செய்தார்.
உடனே சட்டென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, விமுக்தா ஷர்மா மீது ஊாற்றி தீ வைத்துள்ளார். பின்னர் கல்லூரி முதல்வர் பற்றி எரிந்த தீயுடன் கல்லூரியை நோக்கி ஓடியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் கல்லூரி முதல்வர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தீ வைத்து கொளுத்திய இளைஞனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவன் முன்னாள் மாணவன் அசுதோஷ் ஸ்ரீவஸ்தா என்பதும், தனது மதிப்பெண் சான்றிதழை வழங்கிட கோரி பல முறை முதல்வரை சந்தித்தும், தராமல் இழுத்தடிப்பு செய்ததால் ஆத்திரம் தாங்காமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இம்மாநிலத்தில் கல்லூரி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என பேராசிரியர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கல்லூரி முதல்வரை முன்னாள் மாணவர்தீ வைத்து கொளுத்திய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.