''நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டது'' – பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் உணர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டெல்லி மாநில கல்வி அமைச்சராக இருந்தவருமான மணிஷ் சிசோதியா கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த 2021-22ல் அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், இது தொடர்பாக பிரமதர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். இந்த கடிதத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது: ”இந்தியா தற்போதுவரை ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, நாடு ஜனநாகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறவிட்டதையே காட்டுகிறது. மணிஷ் சிசோதியா மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது. டெல்லி கல்வித் துறையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் மணிஷ் சிசோதியா. அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே உலகம் பார்க்கிறது. பாஜக ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயக மதிப்பீடுகள் அச்சுறுத்தலின் கீழ் இருப்பதாகவே உலகம் சந்தேகிக்கிறது.

மத்திய விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜகவில் சேர்ந்ததும் அவர்களுக்கு எதிரான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மென்மையாகக் கையாளுகின்றன. இதற்கு தற்போதைய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மேவே உதாரணம். கடந்த 2015ல் அவர் பாஜகவில் சேர்ந்த பிறகு அவருக்கு எதிராக விசாரணை அமைப்புகள் கடுமை காட்டவில்லை.

இதேபோல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக செயல்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மதிப்பை அவர்கள் திட்டமிட்ட ரீதியில் சீர்குலைக்க முயல்கிறார்கள். தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, டெல்லி மாநில ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கையே கொண்டிருக்கிறார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதன் காரணமாக, ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.