நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.2.5 கோடி பணம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகை வியாபாரியை காரில் கடத்திச்சென்று 2 கோடியே 23 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சுமார் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் முத்துப்பட்டணத்தைச்சேர்ந்த ரவிச்சந்திரன், தொழில் சம்பந்தமாக சென்னைக்குச்சென்று விட்டு, இன்று அதிகாலையில் காரைக்குடி கழனிவாசலுக்கு ஆம்னி பஸ்சில் வந்து இறங்கினார்.

அப்போது, இன்னோவா காரில் காக்கி பேன்ட், வெள்ளை சட்டை, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த 4 பேர், அவரை காரில் கடத்திச் சென்று, அவர் வைத்திருந்த பணம், தங்கத்தை பறித்து விட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லேனா விலக்கு சுங்கச்சாவடி அருகே இறக்கி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து காரைக்குடிக்கு வந்த ரவிச்சந்திரன், காரைக்குடி வடக்கு போலீசில் புகாரளித்தார். ஆவணங்களின்றி 2 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே எடுத்து வரமுடியும் என்ற நிலையில், கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் நகையின் மதிப்பு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.