அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சற்று முன்பு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஓபிஎஸ் தெரிவித்தாவது, “ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். எதுவுமே முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.
அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டிலை பார்த்தால் அலர்ஜியாக உள்ளது. பிட்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது.
அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இவரை (இபிஸ்) விட சர்வாதிகார அரசியல்வாதி, யாரும் இருக்க முடியாது.
எங்களை கட்சியிலிருந்து நீக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது. கட்சியின் தற்போதைய நிலைக்கு நான் காரணமில்லை. அவர்கள்தான். நான் மக்கள் மன்றத்தை நாட உள்ளேன். மாவட்டம் தோறும் சென்று தொண்டர்களை சந்தித்து முறையிட உள்ளேன்” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்ததாவது, “மக்கள் மன்றத்தில் தோல்வியை சந்தித்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தவில்லை.
மாவட்டம் தோறும் உள்ள நிர்வாகிகளை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். பொதுக்குழு தீர்மான விவகாரம் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ள போது, யார் இவர்களுக்கு தேர்தல் நடத்த அனுமதி வழங்கினார்கள்.
எப்படி இவர்கள் தேர்தலை நடத்தலாம்? சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். அதிமுகவை சீரழிக்க எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.