ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் பேரூராட்சியில் நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால், விற்பனையும் மந்தமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தையில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தங்களின் ஆடுகளை விற்கவோ, வாங்கவோ கூடுகின்றனர்.
மேலும், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும்கூட ஆடுகளை வாங்கவும், விற்கவும் வருகின்றனர். இதனால் ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தைக்கென தனிமவுசு உண்டு. இங்கு வாரந்தோறும் ₹10 முதல் ₹20 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் ஆட்டுச்சந்தை கூடியது. விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் ஆடுகள் கொண்டுவரப்பட்டது.
ஆனால், ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால் விற்பனையும் சற்று மந்தமாகவே காணப்பட்டது. இதில், ₹8 லட்சத்திற்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானது. வழக்கத்தைவிட நேற்று விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.