கடலூர்: திட்டக்குடி அரசு மருத்துவமனையில் திடீரென தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வுசெய்ய சென்றபோது, பணியில் ஒரே மருத்துவர் மட்டும் இருந்ததைக் கண்டு, மற்ற மருத்தவர்கள் என்ன ஆனார்கள் என கேள்வி எழுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கூறிவிட்டுச் சென்றார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குச் சென்ற அமைச்சர் சி.வெ.கணேசன் அங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு 8 மருத்துவர்கள் உள்ள நிலையில், ஒரே ஒரு பெண் மருத்துவர் மட்டும் பணியில் இருக்க, மற்ற மருத்துவர்கள் எங்கே என வினவினார். காலை 7.30 மணிக்கு வரவேண்டிய மருத்துவர்கள் மணி 9 ஆகியம் இதுவரை வராதது ஏன் எனவும், அந்தப் பெண் மருத்துவரிடம் கேட்டுவிட்டு, அவர் சரிவர பதிலளிக்காத நிலையில், அவரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பின்னர் மருத்துவமனை வருகைப் பதிவேட்டை ஆய்வுசெய்து, மற்றவர்கள் வராமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. நாளை விடுப்புக் கடிதம் கொடுத்த ஒரு மருத்துவர், இன்றே பணிக்கு வராமல் விடுப்பு எடுத்திருப்பதும் கண்டறியப்பட்டதால், ஆவேசமடைந்த அமைச்சர், கடலூர் மருத்துவ இணை இயக்குநரை தொடர்பு கொண்டு, புறநோயாளிகள் பிரிவில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், மருத்துவர்கள் இல்லாததை சுட்டிக்காட்டி, உடனடியாக அவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்க மேற்கொண்டார்.
பின்னர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து மருத்துவ சிகிச்சைக் குறித்தும் மாத்திரை, உணவுகள் குறித்தும் கேட்டறிந்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.