சென்னை: நீர் விளையாட்டுகள், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புழல் உள்ளிட்ட 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதன்படி ‘ஏரிக்கரை மேம்பாடு’ (lake front development) என்ற பெயரில் புதிய திட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரிகளை மேம்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, கொளத்துார் ஏரி, புழல் ஏரி ஆகிய 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
இந்த ஏரிகள் புரனமைக்கப்பட்டு ஏரியைச் சுற்றி நடைபாதை, சைக்கிள் பாதை, வாடகை சைக்கிள் நிலையம், திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கம், தோட்டம், வாகன நிறுத்துமிடம், சிறுவர் விளையாட்டு திடல், திறந்த வெளி தியேட்டர், திறந்த வெளி அரங்கம், நீர் விளையாட்டுகள், மீன் பிடிக்கும் இடம், பறவைகள் பார்க்கும் இடம், மியாவாக்கி காடுகள், படகு சவாரி உள்ளிட்டவை அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.