இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இதனையொட்டி கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முகாமிட்டு நாள்தோறும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் மற்றும் டெவோன் கான்வே போன்ற நட்சத்திர வீரர்கள் தங்களின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடிந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய இருக்கின்றனர்.
இந்நிலையில், 41 வயதாகும் தோனி இந்த ஐபிஎல் தொடருடன் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே விளையாடப்போகும் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த அறிவிப்பை தோனி வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஓய்வு குறித்து தோனி பேசும்போது, சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் முன்பு ஓய்வு பெற விரும்புகிறேன் என்பதால் நிச்சயம் அடுத்தாண்டு விளையாடுவேன் என கூறியிருந்தார். அதனால் அவரின் ஐபிஎல் ஓய்வு அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாக அதிகம்.
அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக 4 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வரிசையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் முன்னணியில் இருந்தாலும், அந்த அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே இளம் வீரரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து ஜியோ சினிமாவில் தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யார் வழிநடத்துவார்கள் என்று ரெய்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரெய்னா, “தோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். ருதுராஜ் உங்களின் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு என்னுயை வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் அவர் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை பெற்றிருந்தார். அந்த சீசனில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களை சிஎஸ்கே அணிக்காக விளாசினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்த நிலையில், இந்த முறை சிறப்பான கம்பேக் கொடுக்க அவர்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.