இந்தியர் என்ற உணர்வில் எல்லோரும் செயல்பட வேண்டும்:  ஜி.கே.வாசன்

மதுரை: இந்தியர் என்ற உணர்வில் எல்லோரும் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை திருமங்கலத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த வாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”பழங்குடியின மக்களுக்கான பட்டியலை வெளியிட்ட தமிழக அரசின் செயல் வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், இட ஒதுக்கீடு, வீடு கட்ட இடம் ஆகியவற்றை தமிழக அரசு தாமதமின்றி துரிதமாக வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து வருகிறேன். இதற்கு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

பெரும்பாலான மாவட்டங்களில் பாஜக வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணியும் வலுவாக செயல்படத் தொடங்கியுள்ளது. 2024 மக்களவை தேர்தல் மூலம் தமிழ்நாட்டின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். வடமாநில தொழிலதிபர்கள் இங்கு பணியாற்றும்போது, வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்ப்பதில் எவ்வித தவறும் கிடையாது.

மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். எல்லோரும் இந்தியன் என்ற உணர்வில் செயல்பட வேண்டும். காழ்ப்புணர்ச்சி அரசியலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தவறாக செயல்பட்டவர்களுக்கு சரியான பதிலடியை மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் கொடுப்பார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.