இம்ரான் கட்சியை தடைசெய்ய சட்ட ஆலோசனை: பாக். உள்துறை அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடைசெய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.  பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி(பிடிஐ)யின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் தோஷகானா பரிசு பொருள் முறைகேடு வழக்கிலும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கிலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தொடர்ந்து தப்பி வந்தார். இதற்கிடையே, தோஷகானா வழக்கில்  நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில், இம்ரான் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த போது, லாகூரில் உள்ள அவரது ஜமன் பார்க் இல்லத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட பஞ்சாப் போலீசார் அதிரடியாக சென்றனர். அப்போது, அங்கு கூடியிருந்த இம்ரானின் ஆதரவாளர்கள் பலரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ராணா சனவுல்லா, ‘’பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை தடைசெய்யப்பட்ட குழுவாக அறிவிப்பதற்கான ஆலோசனைகளை அரசு சட்டக் குழுவுடன் விரைவில் மேற்கொள்ள உள்ளது. இம்ரானின் ஜமன் பார்க் இல்லத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அங்கிருந்து ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. பிடிஐ.யை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க இது போதும்,’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.