தமிழக பட்ஜெட் 2023-24 | சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்கிறார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

சென்னை: 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 2021ல் ஆகஸ்ட் மாதம் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் காகிதமில்லா பட்ஜெட்டாகவும் அது அமைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி 2022-23 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து 2023-24 பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2023 மார்ச் 20ல் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பேரவையில் நாளை (மார்ச் 20) தாக்கல் செய்யப்படுகிறது. இதை மின்னணு வடிவில் (‘இ-பட்ஜெட்’) நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்கிறார்.

இதன்பிறகு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பட்ஜெட் மீதான விவாதத்துக்காக பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு முதல் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 21-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து, 23, 24, 26, 27-ம் தேதிகள் என 4 நாட்களுக்கு பேரவைக் கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது, பட்ஜெட் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும். உறுப்பினர்களின் விவாதத்துக்கு, நிறைவு நாளில் நிதி அமைச்சர் பதில் அளிப்பார். மேலும், இந்த நிதி ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளையும் நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார்.

பேரவைத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுதவிர, பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

முன்னதாக, கடந்த 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களிலும், நிதி மேம்பாட்டுக்கான பல்வேறு புதிய திட்டங்கள், வழிமுறைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.