மதுரை: உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி, மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல்துறை மாணவர்கள் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை தயாரித்தனர்.
இக்கூடுகளை மாணவர்கள், மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர், செயலர் தவமணி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்து பேசியதாவது: “தொடர்ந்து 10 ஆண்டுகளாக இதில் ஈடுபட்டுள்ள விலங்கியல்துறை மாணவர்களை பாராட்டுகிறேன். இக்கல்லூரி மாணவர்கள் தயாரித்து வழங்கிய கூடுகளால் கூடல்நகர் பகுதியில் குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
மேலும், செல்லூர், ஜெய்ஹிந்த்புரம், மேலுார், வைகை தத்தனேரிபாலம் அடியில் பல இடங்களில் சிட்டுக்குருவிகளை காணலாம். மனிதர்களின் நீண்ட கால துணை சிட்டுக் குருவிகள். இதன் வாழ்நாள் 13 ஆண்டு. நமது வீடுகளில் பாதுகாப்பான இடத்தில் கூடுகட்டி வசிக்கும். முன்பு கூரை, ஓட்டு வீடுகளில் அதிகளவில் வசித்தன.
தற்போது கான்கிரீட் வீடுகளாக மாறியதால் வாழ ஏற்றதாக இல்லை. சிட்டுக்குருவி இனம் அழிய செல்போன் கோபுரங்கள் காரணமில்லை. உரம், பூச்சி மருந்துகள் போன்றவையால் சிட்டுக்குருவிகள் மறைவுக்கு காரணமாகிவிட்டன. எண்ணிக்கை அதிகரிக்க, சிட்டுக்குருவிகள் வாழும் சூழலை ஏற்படுத்தி தரவேண்டும்” என்றார்.
விலங்கியல் துறை தலைவர் ஜோசப் ததேயுஸ், பசுமை மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் விழாவுக்கான ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.