எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்படி இருக்கிறார்? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்!

“தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்” ஏன மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்தும் அவர் பேசியுள்ளார்.
கோவிட் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் சுற்றறிக்கை எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரிப்பு தொடர்பான அறிக்கை அது. இந்தியா முழுவதிலும் அதிகரித்துள்ள கொரோனா XBB, BA2 என்ற ஓமைக்ரானின் வகைகளால் ஏற்பட்டுள்ளது.
image
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. எனினும் தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நடத்தப்படும் பரிசோதனைகளில்தான் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏற்படும் கோவிட் அதிகரிப்பே இதற்கு காரணமென தெரிகிறது. திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்த இளைஞருக்கு XBB என்ற ஓமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் 23,833 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 10 லட்சம் பேரை பரிசோதித்துள்ளோம். இதில் 7,000 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. அவர்கள் பூரண குணமடைந்துள்ளனர். அவர்களில், H3n2 -வால் பாதிக்கப்பட்ட 15 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது. பதட்டப்பட தேவையில்லை. 2000 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் நம் மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் இப்போதும் தயார் நிலையில் உள்ளன. மருந்துகளும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன” என்றார்.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலன் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
image
அதற்கு பதிலளித்த அவர், “ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. நேற்று கூட அவரிடம் பேசினேன். நலமுடன் இருக்கிறார். டெல்லி சென்று வந்தபோது அங்குள்ள காற்று மாசு காரணமாகவும் அவருக்கு லேசான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி நலமுடன் இருக்கிறார்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.