தப்பி ஓடிய நபர்களை விட்டு விடுகின்றனர்; எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ. பாய்கிறது: காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி,

ரூ.13,500 கோடி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. இந்நிலையில், அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட்-கார்னர் நோட்டீஸ் உத்தரவை இண்டர்போல் நீக்கியுள்ளது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது.

பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கு விசாரணையில், எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. ரெட்-கார்னர் நோட்டீசானது, சோக்சி வேறு நாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவரை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. இனி அந்த ஆபத்து அவருக்கு இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை இருக்கிறது. ஆனால், மோடிஜியின் நமது மெகுல் பாய், இண்டர்போலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

சிறந்த நண்பருக்காக நாடாளுமன்றம் முடக்கப்படும்போது, 5 ஆண்டுகளுக்கு முன் தப்பியோடிய பழைய நண்பருக்கு, உதவுவதில் இருந்து எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்? என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ரூ.13 ஆயிரம் கோடி பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கு தற்போது மூடப்பட்டு விட்டது. மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர்கள் என்றால் அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. வரிசை கட்டி நிற்கிறது. ஆனால், மெகுல் சோக்சிக்கு தப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.