பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ரூ.24,000 கோடி கடனுதவி| 24,000 crore loan to Sri Lanka to overcome the economic crisis

கொழும்பு கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, அதன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான ஒப்புதலை, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் வழங்கி உள்ளது.

போராட்டம்

நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டியது.

இதனால் அந்நாட்டு மக்கள் அவதி அடைந்தனர். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே குடும்ப ஆட்சி தான் காரணம் எனக் கூறி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடினார். பின், அதிபர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இலங்கையின் எட்டாவது அதிபராக, ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். எனினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீண்டபாடில்லை.

வரவேற்பு

இந்நிலையில், கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவிக்கவும், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான ஒப்புதலை, ஐ.எம்.எப்., வழங்கி உள்ளது. இதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இலங்கை வரலாற்றில் இது ஒரு மைல்கல். ஐ.எம்.எப்., கடனுதவி பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் உதவும். இனி இலங்கை பொருளாதாரத்தில் திவாலாகாது என்ற நம்பிக்கை உள்ளது. அன்னிய செலாவணி அதிகரித்து பொருளாதாரம் மேம்படும். இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஆதரவளித்த ஐ.எம்.எப்., மற்றும் சர்வதேச கூட்டாளிகளுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.