அதிமுக தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு; EPS தரப்புக்கு அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வம் தரப்பில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிக்கும் நிலையில், எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது என வாதிடப்பட்டது.

ஜெயலலிதாவே நிரந்தர பொது செயலாளர் என அறிவித்த நிலையில், அதே பதவியை மீண்டும் கொண்டுவந்து, அப்பதவிக்கு போட்டியிட தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கங்களுக்கு விரோதமாக செயல்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக உயர்நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தெரிவிக்கவில்லை என்பதால் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என வாதிடப்பட்டது.

எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து எந்த விவாதமும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொது குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மக்களும், கட்சியினரும் விரும்புகிறார்கள் என எந்த புள்ளிவிவரங்களும் இல்லாமல் பொது செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதாகவும், இது சம்பந்தமாக கட்சியினரிடமும் எந்த கருத்துகணிப்பும் நடத்தப்படவில்லை என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என எம்.ஜி.ஆர். விதிகளை வகுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது அந்த பதவிக்கு போட்டியிட கடும் தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே கட்சியில் தொண்டர்கள் ஆதரவுடன் முக்கிய பதவியில் உள்ள தன்னை நீக்கியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

பொது செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொது செயலாளர், அந்த பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாகவும், அதில் தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் எனவும் ஒ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், தேர்தலை எதிர்த்த மனுவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக தரப்பில், கட்சியில் உள்ளவர்களை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் பன்னீர்செல்வம் தனி கட்சியை நடத்தி வருவதாகவும், அவரது அணியினர் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், ஜூன் 23ல் கட்சி பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாகவும், பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திமுக-வை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் , அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறைகூற முடியாது என்றும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும், அதனால் தடை விதிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. 52 ஆண்டு கால அதிமுக வரலாற்றில் 47 ஆண்டுகள் பொது செயலாளர் பதவி தான் இருந்துள்ளது என்றும், 5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தன என தெரிவிக்கப்பட்டது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொது செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும், அவ்வாறு கட்சி முடிவு செய்த இந்த நிபந்தனைகளை நீதிமன்றம் சட்டவிரோதம் என கூற முடியாது என்றும் வாதிடப்பட்டது. எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு வெள்ளி காலைக்குள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.