கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த செய்தியை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் வீட்டின் அருகே வசித்து வரும் திருநங்கை ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அமைப்புக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி போலீசார் சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்று அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் விவரம் பின்வருமாறு:- “பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள மதன் என்பவர் கடந்த மாதம் 12ஆம் தேதி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, இது தொடர்பாக யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், அந்த சிறுமி சம்பவம் குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் கடந்த 15ஆம் தேதி அன்று அந்த சிறுமியைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தையின் நண்பராக வந்து சென்ற 48 வயதான சதாசிவம் என்பவர் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்ட போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மூன்று பேரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதில், பதினைந்து வயது சிறுவனைச் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற இரண்டு பேரைச் சிறையிலும் அடைத்தனர்.