கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்ய மே மாத இறுதிக்குள் மாவட்டக் குழு: இந்து சமய அறநிலையத் துறை

சென்னை: கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில், “மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன. திருநெல்வேலி, நாகப்பட்டினம், நாமக்கல் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும். மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மே மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்படாவிட்டால் அறநிலையத் துறை செயலாளரும், ஆணையரும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், மாவட்ட குழுக்கள் எத்தனை நாட்களில் அறங்காவலர்களை நியமிப்பர் என்ற விவரங்களையும், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அறிக்கைத் தாக்கல் செய்ய தவறினால், அறங்காவலர் நியமன பணிகளை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் எனக்கூறி, விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், “மாவட்ட குழுக்களில் அரசியல் கட்சியினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டக் குழுவில் இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசியல் கட்சியைச் சேர்ந்த கடவுள் பக்தி உள்ளவரை நியமிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்து அல்லாதவர் நியமிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்து தனியாகதான் வழக்கு தொடர முடியும். இந்த வழக்கில் அதை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.