உலகின் பல நாடுகளில் தொடர் அச்சுறுத்தல்: 30 நாளில் 10 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்.! அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தகவல்

புதுடெல்லி: உலகம் முழுவதும் கடந்த 30 நாட்களில் 10 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். அன்றைய தினம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. இரு நாடுகளிலும் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 30 நாட்களில் உலகம் முழுவதும் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த மார்ச் 16 அன்று, நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் பகுதியில் மிக சக்திவாய்ந்த 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக அதே கெர்மடெக் தீவுகள் பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிப்ரவரி 23 அன்று தஜிகிஸ்தானில் 6.9 ரிக்டர் அளவும், மார்ச் 18 அன்று ஈக்வடாரில் 6.8 ரிக்டர் அளவும், மார்ச் 22 அன்று அர்ஜென்டினாவின் சான் அன்டோனியோ டி லாஸ் கோப்ரெஸ் நகரில் 6.5 ரிக்டர் அளவும், மார்ச் 21 அன்று ஆப்கானிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவும், எஸ்பிரிடு சாண்டோ தீவில் 6.5 ரிக்டர் அளவும், மார்ச் 1ல் பப்புவா நியூ கினியாவின் கிம்பேவில் 6.5 ரிக்டர் அளவும், மார்ச் 14ல் மடாங்கில் 6.3 ரிக்டர் அளவும், பிப்ரவரி 23ல் இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.0 ரிக்டர் அளவிற்கு மேல் நிலநடுக்கம் பதிவாகி அந்த பகுதிக்க சுனாமி எச்சரிக்கை விடப்படும். அந்த வகையில் மேற்கண்ட 10 இடங்களில் கடந்த 30 நாட்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.