நடிகர் அஜித்தின் தந்தை உடல் தகனம் – ஆறுதல் கூறிய திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல், பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.  இந்நிலையில், நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காலமானார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்துக்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து 85 வயதாகும் சுப்பிரமணியம் உடல் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டது.

உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். அமைச்சர் உதயநதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். 

அதேபோல் நடிகர்கள் விஜய், பார்த்திபன், பிரசன்னா, மிர்ச்சி சிவா, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய் மற்றும் தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோரும சென்று மரியாதை செலுத்தினர்.

மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, சுப்பிரமணியம் உடல் பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். தந்தையின் உடலை அஜித் கனத்த இதயத்துடன் எடுத்துச் சென்றார். அங்கு வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட பின், சுமார் நண்பகல் 12 மணியளவில், சிவசுப்பிரமணியம் உடல் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.