பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதி தீப்பிடித்த விபத்தில் நான்கு பேர் பலத்த காயம்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணம் செய்த 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

சேலம் மேட்டூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் தனது மனைவியின் தந்தை மற்றும் தாயாருடன் சிகிச்சைக்காக மதுரைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

காரை சாந்தப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார். வேடசந்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிய தொடங்கியது.

2 பேர் காரில் இருந்து வெளியேறிய நிலையில், ஓட்டுனர் சாந்தப்பன் மற்றும் சந்தோஷ்குமாரின் மாமனார் பொன்னம்பலம் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

இதில் பொன்னம்பலம் மற்றும் சாந்தப்பனின் கால்கள் தீயில் கருகிய நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்த அவர்களை மீட்டனர்.

4 பேரும் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.