கர்நாடகா தேர்தல்: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இருக்கா.. இல்லையா.? – அமித்ஷா உறுதி.!

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்தை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல் களம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்தநிலையில் கர்நாடகாவில் வெற்றியை தீர்மானிக்கும் ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களின் வாக்குகளை கவர பாஜக தலைமையிலான அரசு முக்கிய நகர்வு ஒன்றை செய்தது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கான 4 சதவீத ஒதுக்கீட்டை நீக்கி, மாநில இடஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைச் செய்துள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கர்நாடக அரசு இடஒதுக்கீடு ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாக உயர்த்தியது. அதேபோல் முஸ்லிம்களுக்கான 4 சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. முஸ்லிம்கள் இப்போது 10 சதவீத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) வகைக்கு மாற்றப்படுவார்கள்.

சமீபத்திய மறுசீரமைப்புடன், முஸ்லிம்கள் இப்போது பிராமணர்கள், வைசியர்கள், முதலியார்கள், ஜைனர்கள் மற்றும் பிறரைக் கொண்ட EWS ஒதுக்கீட்டில் போட்டியிட வேண்டியிருக்கும். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, மதச் சிறுபான்மையினரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, எந்த நிபந்தனையும் இல்லாமல் EWS குழுவின் 10 சதவீத தொகுப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்.

மத்திய அரசு வழங்கிய EWS ஒதுக்கீடு 10 சதவீதம் என்பது குறிப்பிடதக்கது. கடந்த ஆண்டு பெலகாவி சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது ஒக்கலிகார்களுக்கு 4 சதவீதமும் மற்றும் லிங்காயத்துகளுக்கு 5 சதவீதமும் என இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தநிலையில் முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு இப்போது பிரிக்கப்பட்டு ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

நான்கு சதவீதம் (சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு) 2சி மற்றும் 2டி என இரண்டாகப் பிரிக்கப்படும். ஒக்கலிகர்கள் மற்றும் பிறர்களுக்கான நான்கு சதவீத இடஒதுக்கீடு இனி ஆறு சதவீதமாகவும், வீரசைவ பஞ்சமசாலி மற்றும் பிறர் (லிங்காயத்துகள்) ஏழு சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர் பொம்மை கூறினார்.

ஆனால் இதை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் மக்களான சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என கூறியது. அதேபோல் பஞ்சமாலி சமூகத்தினரும் பாஜகவின் இந்த செயலை எதிர்த்துள்ளனர்.

இந்தநிலையில் கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா கூறும்போது, “சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இல்லை. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

காங்கிரஸ் தனது சமூகங்களை பிரிப்பதன் ஒரு பகுதியாக சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது. பாஜக அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலால், வாக்கு வங்கியின் பேராசையால், சுதந்திரத்திற்காகவும், ஹைதராபாத் விடுதலைக்காகவும் தங்களைத் தியாகம் செய்த மக்களை அவர்கள் நினைவுகூரவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.