காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை கருப்பு சட்டையணிந்து சட்டமன்றத்திற்கு வர வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக சட்டமன்றத்திற்கு நாளை (மார்ச்27) வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சட்டமன்றத்திற்கு நாளை (மார்ச்27) வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும்.

  • ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்திற்கு வரவேண்டும்.
  • சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேச வேண்டும்.
  • சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி சமூகத்தை ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி மார்ச் 24 தேதியன்று, எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிட்டு எம்.பி.யானார். இந்நிலையில், ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. அதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஞாயிறன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சத்யாகிரக அறப்போராட்டங்கள் நடைபெற்றன. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.