நாட்டில் 2022-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது: பிரதமர் மோடி பேட்டி!

டெல்லி: நாட்டில் 2022-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் பின்பு, மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி வழியே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். இதனை முன்னிட்டு இந்த மாதத்திற்கான 99-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது; நாட்டில் 2013-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 5 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.

இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார். அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வருவோர் இறைவனுக்கு ஒப்பானவர்கள் என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். ராமநவமி, ரமலான் உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோன்று, இந்திய அதிகாரத்தில் பெண்களும் முன்னேறி வருவது பற்றியும் அவர் பேசியுள்ளார். அவர் கூறும்போது, 75 ஆண்டுகளில் முதன்முறையாக நாகாலாந்தில் 2 பெண்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் அமைச்சரவையில் மந்திரியாகவும் ஆகியுள்ளார். வளர்ந்து வரும் இந்தியாவின் அதிகாரத்துவத்தில் பெண்களின் அதிகாரமும் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.