பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் ஸ்ரீராமசமுத்திரம் காவேரி நகரை சேர்ந்த சண்முகம் மகன் மணிகண்டன்(25). டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் தர்மபுரி மாவட்டம் நல்லப்பட்டியை சேர்ந்த முனிராஜ் மகள் மோனிகா(20) என்பவரை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்தார். இருவரும் காட்டுப்புத்தூர் தவிட்டுப்பாளையம் காலனியில் வாடகை வீட்டில் வசித்தனர். 2 மாத கர்ப்பிணியான மோனிகா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார்.

இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் மோனிகாவின் பெற்றோர் புகார் செய்தனர். அதில், மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மோனிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர். மோனிகாவின் திருமணத்துக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஓராண்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.