தி.மலை சேத்துப்பட்டு ஒழுங்குமுறை கூடத்தில் குவிந்துள்ள 30,000 நெல் மூட்டைகள் – மார்ச் 31 வரை கொள்முதல் நிறுத்தம்

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 30,000 நெல் மூட்டைகள் குவிந்துள்ளதால் வரும் 31-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். ரூ.150 வரை கூடுதல் விலை கிடைப்பதால், நெல் மூட்டைகளின் வரத்து தினசரி அதிகரித்து வருகிறது. தினசரி 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள 6 கிடங்குகளிலும் சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் நிரம்பி உள்ளன. இதன் எதிரொலியாக, விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி, வரும் 31-ம் தேதி நிறுத்தி வைக்கப்படுவதாக கண்காணிப்பாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிர்வாகம் சார்பில் இன்று(28-ம் தேதி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் 31-ம் தேதி வரை எடை போடுவதற்கு தேவையான நெல் மூட்டைகள் இருப்பு உள்ளது. இதனால், 31-ம் தேதிக்கு பிறகு நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்த செயலாளர் சந்திரசேகர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு மற்றும் போளூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகள் வரத்து அதிகம் உள்ளது. ஒரு மூட்டைக்கு ரூ.150 வரை கூடுதல் விலை கிடைப்பதால் நெல் மூட்டைகள் அதிகளவில் விவசாயிகள் கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் வங்கி கணக்கில் கொள்முதல் தொகை உடனுக்குடன் செலுத்தப்படுகிறது.

நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொண்டு சென்றதும், விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. சேத்துப்பட்டில் வரத்து அதிகம் உள்ளதால், கிடங்குகள் நிரம்பி உள்ளது. இதனால், வரும் 31-ம் தேதி வரை நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.