பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமலாக்க துறை அலுவலகமே இல்லை: சத்தீஷ்கார் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் காங்கிரஸ் தலைவர் ராம் கோபால் அகர்வால், தொழிலதிபர் கமல் சர்தா ஆகியோரது அலுவலகம் மற்றும் வீடுகளில் என பல இடங்களில் அமலாக்க துறை இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளது. சுரங்கம் மற்றும் நிலக்கரி ஊழலில் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, சத்தீஷ்கார் முதல்-மந்திரி கூறும்போது, தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், விவசாயிகள் என அமலாக்க துறை சோதனை செய்யாத பிரிவுகளே கிடையாது.

ஆனால், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் மற்றும் கர்நாடகாவில் அமலாக்க துறை அலுவலகமே இல்லாதது போன்று காணப்படுகிறது.

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே அரசு இருந்த வரை மத்திய அமைப்புகளின் அதிரடி செயல்பாடு இருந்தது. அரசு மாற்றம் நிகழ்ந்ததும், அந்த அமைப்புகளால் பயன் எதுவும் இல்லாமல் போய் விட்டது என கூறியுள்ளார்.

இந்த சோதனைகளுக்கு பின்னணியில், பா.ஜ.க.வின் மத்திய மற்றும் மாநில தலைவர்கள் உள்ளனர். அமலாக்க துறை பாரபட்சமற்று இருக்க வேண்டும். 40 சதவீத அரசு நடக்கும், எம்.எல்.ஏ. ஒருவரின் இல்லத்தில் இருந்து ரூ.6 கோடி கைப்பற்றப்பட்ட கர்நாடகாவில் அவர்கள் சோதனை செய்ய செல்லவில்லை.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின்பு அதானியின் சொத்துகள் 60 சதவீதம் குறைந்தன. ஆனால், அவரிடம் அமலாக்க துறை சோதனை நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.