மீண்டும் அதிகரிக்கும் COVID-19 தொற்று: பழைய நிலை திரும்பலாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

நாட்டில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, ஐசியூவில் சேர்க்கப்பட வேண்டிய நிலை, ஆக்ஸிஜனுக்கான தேவை ஆகியவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் திங்களன்று தெரிவித்தனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,805 புதிய கோவிட் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டது. 134 நாட்களுக்குப் பிறகு, நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று 10,000 ஐத் தாண்டியது.

“தற்போது, கோவிட்-19 புதிய விகாரத்தைப் பொறுத்த வரையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் எந்த அதிகரிப்பும் இல்லை. ஆனால் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அது நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் ஆக்சிஜன் தேவைக்கும், ஐசியு தேவைக்கும் வழிவகுக்க வாய்ப்புள்ளது.” என்று ஃபோர்டிஸ் மருத்துவமனை நொய்டாவின் நுரையீரல் மற்றும் கிரிட்டிகல் கேர் கூடுதல் இயக்குநர் ராகுல் சர்மா ஐஏஎன்எஸ் இடம் தெரிவித்தார்.

தினசரி நேர்மறை விகிதம் 3.19 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 1.39 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதிகரித்து வரும் கோவிட் 19 தொற்றை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தினார். அதிகரித்து வரும் தொற்றை சமாளிக்க ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அரசு மருத்துவமனைகளில் நாடு தழுவிய போலி பயிற்சிக்கு (மாக் ட்ரில்) மத்திய சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஒரு ஆலோசனையில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் கோவிட் -19 தடுப்பூசி விகிதங்களின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க அளவு கவரேஜ் பெற்றதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என்று கூறினார். தொற்றின் எழுச்சியைக் கட்டுப்படுத்த பொது சுகாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. 

“கோவிட் மாறுபாடு XBB1.15 மற்றும் XBB1.16 ஆகியவை தற்போது கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கு காரணமாகும். ஆனால் தனிநபர்கள் முகக்கவசத்தைப் பயன்படுத்துதல், சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற கோவிட்-பொருத்தமான நடத்தையைப் பின்பற்றினால் இந்த எழுச்சியை கட்டுப்படுத்தலாம். கவலைப்படத் தேவையில்லை. ” என நவி மும்பை அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் ஆலோசகர் லக்ஷ்மன் ஜெசானி ஐஏஎன்எஸ் இடம் கூறினார்.

பூஸ்டர் டோஸ்களுக்குத் தகுதியானவர்கள், குறிப்பாக கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தில் இருப்பவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டிருப்பவர்கள் அவற்றைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்”பூஸ்டர் டோஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸின் புதிய மாறுபாடுகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் உதவும்” என்று ஜெசானி குறிப்பிட்டார்.

காய்ச்சல் ஏற்பட்டு அது குறையாமல் இருப்பது, சளியுடன் இருமல், ஆக்சிஜன் அளவு 92 சதவீதத்திற்கும் கீழே குறைவது ஆகியவை கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அறிகுறிகள் என சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். நோயாளிகளுக்கு அதிக எடை இழப்பு, பசியின்மை, மார்பு வலி மற்றும் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

“அறிகுறிகள் பொதுவாக லேசானவையாகவே இருக்கும். பாராசிடமால், சில வகையான ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றால் இவற்றை சரி செய்து விடலாம். ஆனால் மக்கள், குறிப்பாக 60-65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கோவிட் நோயிலிருந்து சில வகையான தீவிர நோய்த்தொற்றுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன, ஆகையால் கவனம் தேவை” என்று சிகே பிர்லா மருத்துவமனை குருகிராமில் உள்ள உள் மருத்துவத்தின் ஆலோசகர் துஷார் தயல் ஐஏஎன்எஸ் இடம் தெரிவித்தார். 

கூடுதலாக, இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வீரிய குறைபாடுகள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள், புற்றுநோயாளிகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுபவர்கள் கோவிட் நோய்த்தொற்றின் அதிகபட்ச ஆபத்தில் இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.