கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் டாஸ்மாக் பார் திறக்கும் முன்னரே மது பிரியர்கள் பாரில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ காட்சி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையுடன் இணைந்த பாரினை தனி நபர் ஒருவர் எடுத்து நடத்தி வருகிறார். இந்த பாரில் ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பான வகையில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன.
தற்போது டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே இங்குள்ள பாரில் மது பிரியர்கள் அமர்ந்து மது குடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இதன் மூலம் டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முன்பே பாரில் சிலர் சட்டத்திற்கு புறம்பாக மதுபானங்களை விற்று வருவதாக தெரிகிறது.
தற்போது அரசாங்க விதிகளின்படி 12.40 மணிக்கு டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும். ஆனால் இதற்கு முன்பாகவே காவல்காரன்பட்டியிலிருக்கும் பாரில் மது பிரியர்கள் மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு தரப்பு தெரிவித்துள்ளது.