கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: காங்கிரஸ் அதிரடி வியூகம்… சிக்கலில் பாஜக!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. வழக்கம் போல்
காங்கிரஸ்
, பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாகவே களம் அமைந்துள்ளது. ஓல்டு மைசூரு மண்டலம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு வட்டம் இருக்கிறது.

இருமுனைப் போட்டி

இதனால் மற்ற பகுதிகளில் காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே நிலவுகிறது. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் இருக்கிறது. கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளை விட அதிக வாக்கு சதவீதத்தை காங்கிரஸ் (38.14%) பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சியை அமைக்க வேண்டிய நெருக்கடியால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியிடம் முதல்வர் பதவியை கொடுக்க வேண்டியிருந்தது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

இம்முறை பலமான ஏற்பாடுகளுடன் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். எனவே தனது சொந்த மாநிலத்தில் வெற்றி பெற்றுவிட வேண்டிய பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வியூகம் என்னென்ன? எனக் கேள்வி எழுகிறது.

பாஜகவிற்கு எதிர்ப்பு

இதுதொடர்பாக அக்கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்களிடம் பேசுகையில், ஆளும் பாஜகவிற்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு 40 சதவீத கமிஷன் கேட்ட விஷயம் மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது, அந்த சமூக மக்களை இழைத்த துரோகம்.

காங்கிரஸின் செயல்பாடுகள்

பாஜகவை பொறுத்தவரை கட்சிகளை உடைத்து, முக்கிய தலைவர்களை இழுத்து வந்து அரசியல் செய்யும் பாணியை தொடர்ந்து செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது. கடந்த 2018 சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அமைந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன. ஆனால் பாஜக கொடுத்த வாக்குறுதிகளில் 4 சதவீதத்தை கூட முடிக்கவில்லை.

எடியூரப்பா அவுட்

பல ஆயிரம் கோடி திட்டங்கள், பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலை உள்ளிட்டவை எல்லாம் தேர்தல் அரசியலுக்காக செய்யப்படும் ஜாலங்கள் என்ற பார்வையை முன்வைக்கின்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெரிதும் பாதித்துள்ளன. பாஜக தரப்பில் பலம் வாய்ந்த தலைவராக இருந்தவர் எடியூரப்பா. அவர் அரசியலில் ஓய்வு பெற்றுவிட்டதால் வேற தலைவர்களே இல்லை.

இலவச அறிவிப்புகள்

அதனால் தான் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து கர்நாடகா வந்த வண்ணம் உள்ளனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் ஏன் இங்கு வரவில்லை. தேர்தல் வரவுள்ளதால் இப்படி மாறி மாறி சுற்றுப் பயணம் வருகின்றனர். அறிவிப்புகள் வெளியிடுகின்றனர். இவற்றை எல்லாம் மக்கள் மன்றத்தில் முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவோம்.

மேலும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் போன்ற இலவச திட்டங்கள் பலவற்றை அறிவித்துள்ளோம். இவை அனைத்தும் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களாக காங்கிரஸ் கட்சிக்கு பெரிதும் கைகொடுக்கும் எனக் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.