தனுஷ் படப்பிடிப்பு நடப்பது காட்டில் அல்ல… தனியார் இடத்தில் தான் : அருண் மாதேஸ்வரன் காட்டம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக திருநெல்வேலி அருகில் உள்ள களக்காடு உள்ளிட்ட வனப்பகுதிக்கு அருகில் நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்த படக்குழுவினர் அரசிடம் முறையாக அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும் படப்பிடிப்பு நடத்துவதற்காக குற்றாலத்தில் இருந்து நீர் வரும் ஆதார வழித்தடங்களை சேதப்படுத்தியதாகவும் காட்டில் படப்பிடிப்பு நடத்துவதால் அருகில் உள்ள வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி உள்ளூர் மக்கள் சிலரும் சமூக ஆர்வலர்கள் சிலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கியதோடு இதுகுறித்து வனத்துறையிடம் முறையிட போவதாகவும் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது, இரண்டரை மாதங்களுக்கு மேலாக இந்த பகுதியில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் படப்பிடிப்பு நடத்துவது காட்டில் அல்ல.. தனியாருக்கு சொந்தமான இடத்தில் தான்.. அனைத்து தரப்பு அதிகாரிகளிடமும் முறையான அனுமதி பெற்று தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த இடத்தில் இவ்வளவு பெரிய செட் அமைத்து படமாக்கி வருகிறோம் என்றால் அது அதிகாரிகளின் முறையான அனுமதி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. இப்போது திடீரென இந்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கிறது. இதுகுறித்து படத்தை தயாரித்து வரும் நிறுவனம் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி இது குறித்த சிக்கல்களை சரி செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. அதேசமயம் எங்களது படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.