மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது

மெட்ரோ ரயில் திட்டம் இந்தியாவின் பல நகரங்களில் செயல்முறைபடுத்தப்பட்டு வெற்றிகரமாக இயக்கத்தில் உள்ளது. வாகன நெரிசல் அதிகமாக உள்ள மெட்ரோ நகரங்கள் மற்றும் பிற நகரங்களில் மெட்ரோ ரயில்கள் மூலம் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கிறது. சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்கான அறிவிப்பும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. 

இதில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகராக ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் & கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நேற்று (28.03.2023) வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கூட்டம் இன்று (29.03.2023) சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் திரு. த. அர்ச்சுனன் (திட்டங்கள்) தலைமை தாங்கினார். 

இக்கூட்டத்தின் போது திட்ட இயக்குனர், இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாள் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு). ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் & கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பிரிதிநிதிகள் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விரைவில் மதுரையில் பங்குதாரர்கள் கூட்டம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், தலைமையில் நடைபெறவுள்ளது.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை அமைக்க உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.