வேறொரு பெண்ணுடன் திருமணம்… தாலிகட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய மனைவி!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்குமார் (30). திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சபிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்தனர்.

இந்த நிலையில், சபிதாவுக்கு தெரியாமல், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக விவகாரத்து பெற்றதாகக் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து திருவெண்காடு கோவிலில் ராம்குமார் தன்னுடன் பணியாற்றும் சக பெண் காவலரை, உறவினர்களின் முன்னிலையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சபிதா, தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். பெண் காவலருடன் அங்கிருந்து ஓடிய, காவலர் ராம்குமார் திருவெண்காடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். சம்பந்தப்பட்ட இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கச் சொல்லி திருவெண்காடு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து, சபிதாவின் குடும்பத்தினர் நேற்று மாலை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷாவிடம் தனது கணவன் மோசடியாக விவாகரத்துபெற்று வேறொரு திருமணம் செய்ய முயன்றது குறித்து புகார் அளித்தார். அவரிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி என்.எஸ்.நிஷா, சீர்காழி டிஎஸ்பி அலுவலகத்துக்கு புகாரை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட தனது காதல் கணவர் வெறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட சபிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “சபிதா ஆகிய தானும் எனது கணவரான ராம்குமாரும் ஆறு வருடங்களாக காதலித்து 2016-ல் ஜூன் 19-ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கணவருடன் அவரது வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே, யாருக்கும் தெரியாமல் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அவரே விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், சரியாக வீட்டிற்கு வரமால் உள்ளார் என்று தான் நெய்வேலி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும், அப்போது தான், அவர் தன்னை அவரது மனைவியே இல்லையென மாயவரத்திலுள்ள கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒருதலைபட்சமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்து பெற்றுள்ளார் எனத் தெரியவந்தது.

இதனிடையே, தனது கணவருக்கும் சீர்காழி காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ரம்யாவிற்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பெண் காவலர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் இவை குறித்து அவரது பெற்றோரிடமும் மூன்று முறை கண்டித்துள்ளதாகவும் கூறினார். பின்னர், அப்பெண் காவலரின் சகோதரர்களும் நீயும் எனது சகோதரி போலதான்; உனது வாழ்க்கையை எவ்வித பிரச்சனையும் எனது சகோதரியால் வராது என்று கூறியிருந்ததாக தெரிவித்தார்.

பின்னர் மீண்டும், எனது கணவர் சரியாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில், அவர் மீது புகார் அளிக்க சென்றபோது தான், ஒருதலைபட்சமாக விவாகரத்து வாங்கியது தனக்கு தெரிந்தது என வருந்தினார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தான், எனது கணவரும் அந்த பெண் காவலரும் திருவெண்காடு சுவதாரண்யேசுவரர் கோயிலில் திருமணம் செய்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன் என்றார். எனவே, காவல்துறையினரும் நீதிமன்றமும் விசாரணை மேற்கொண்டு தனக்கு நியாயம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.