சிறை கைதிகளுக்கு 1000 நூல்கள் வழங்கிய விஜய்சேதுபதி

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நூலகங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. நூலகங்கள் இருக்கும் சிறைகளில் அது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில் சிறப்பு நூலக திட்டத்திற்கு சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக் கண்ணன் உள்ளிட்டோர் புத்தகங்களை சேகரிக்கின்றனர். இந்த திட்டத்திற்கு பலரும் நூல்களை வழங்கி வருகிறார்கள்.

நடிகர் விஜய்சேதுபதி மதுரை மத்திய சிறை கைதிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகை புத்தகங்களை நன்கொடையாக வழங்க திட்டமிட்டார். இதையொட்டி சுமார் 1000 புத்தகங்களுடன் மதுரை மத்திய சிறைக்கு சென்றார். சிறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் ஆகியோரை சந்தித்து புத்தகங்களையும் வழங்கினார்.

இது குறித்து விஜய்சேதுபதி கூறும்போது “சிறைக் கைதிகளை புத்தகங்கள் மூலம் நல்வழிப்படுத்தும் முயற்சியை பாராட்டுகிறேன். இது பற்றி கேள்விப்பட்டதும் நிறைய புத்தகங்களை வழங்க வேண்டும் எனக் கருதினேன். தற்போது, உசிலம்பட்டி பகுதியில் சினிமா ஷூட்டிங்கில் இருப்பதால் முதல் கட்டமாக 1000 புத்தகங்களை வழங்குகிறேன். இலக்கியம், கிராமத்து பின்னணி, கைதிகளை நல்வழிப்படுத்தும் போதனை உள்ளிட்ட பல்வேறு விதமான புத்தகங்களை வழங்கியுள்ளேன். சிறைத் துறை அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு. இத்திட்டம் வெற்றி பெறவேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.