சேலம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்: அதிநவீன வசதிகளைக் கண்டு வியந்த பயணிகள்

சேலம்: நாட்டின் முக்கிய நகரங்களை இணக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் வரும் ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்படவுள்ள நிலையில், இன்று கோவையில் இருந்து சேலம் வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் விரைவு ரயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கெனவே 10 வந்தே பாரத் விரைவு ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் 11-வது வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, சென்னையில் இருந்து கோவை வரை இயங்க கூடிய வந்தே பாரத் விரைவு ரயிலை வரும் ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

இந்நிலையில், வந்தே பாரத் ரயில் இயக்கத்தை முன்னிட்டு, இதற்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் விரைவு ரயில் புறப்பட்டு காலை 8 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து காலை 9.15 மணிக்கு சேலம் ரயில் நிலையத்துக்கு வந்தே பாரத் விரைவு ரயில் வந்தடைந்தது. சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சிங் ரயிலில் உள்ள சிறப்பம்சங்களை பார்வையிட்டு பயணத்தில் தொழில்நுட்ப ரீதியில் பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா என ஆய்வு செய்தார்.

பின்னர் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு வந்தே பாரத் விரைவு ரயில் புறப்பட்டு மீண்டும் இன்று மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்தது. வந்தே பாரத் விரைவு ரயிலில் மொத்தம் 16 பெட்டிகளை கொண்டுள்ளது.

இதில் உயர்தர குஷன் சீட்கள், 360 டிகிரியில் சுழலும் வகையில் இருக்கைகள், சிசிடிவி கேமரா வசதி, ரயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ள மைக் வசதி, நவீன கழிவறை, ஏசி வசதி, வைபை, ஜிபிஎஸ், எல்சிடி திரைகள், தனித்தனி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. சேலம் வந்தடைந்த வந்தே பாரத் விரைவு ரயிலை ரயில் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.