தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு: மம்தாவுக்கு எந்தவிதக் கருணையும் காட்டக்கூடாது மும்பை ஐகோர்ட் உத்தரவு..!!

மும்பை: தேசிய கீதத்தை அவமதித்தாக எழுந்த புகாரை கிழமை நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மும்பையில் கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மம்தா. ஆனால், தேசிய கீதத்தை பாடினார். மேலும் பாடல் முடிவதற்கு முன்னதாக எழுந்து நின்ற நிலையில் 2 வரிகளைப் பாடினார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடி முடிக்கப்படுவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி நடந்த அரங்கை விட்டு முதல்வர் மம்தா வெளியேறினார்.

இதைக் கண்டித்து சமூக செயற்பாட்டாளர் விவேகானந்த் குப்தா என்பவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செஷன்ஸ் நீதிமன்றம் மம்தாவுக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், மம்தா பானர்ஜி சார்பில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சம்மனை ரத்து செய்த செஷன்ஸ் நீதிமன்றம், மம்தா பானர்ஜி மீதான புகார் குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை தள்ளுபடி செய்தும், சம்மன்களை ரத்து செய்ய கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மம்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமித் போர்க்கர் கூறியதாவது. இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்றமே விசாரிக்கலாம். இதில் உயர் நீதிமன்றம் தலையிடாது. மேலும் இந்த வழக்கில் மம்தாவுக்கு எந்தவிதக் கருணையையும் நீதிமன்றம் காட்டக்கூடாது. மம்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.