பத்து தல படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

Pathu Thala Movie Review: ஜில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, கலையரசன், அனு சித்தாரா நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான மப்டி படத்தின் ரீமேக் தான் பத்து தல.  ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.  ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பத்து தல படத்தில் சிம்புவின் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

ஒன்லைன்

கன்னியாகுமரி பகுதியில் மிகப்பெரிய மணல் மாஃபியாவாக சிலம்பரசன் ஏஜிஆர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார்.  முதலமைச்சரை தேர்வு செய்யும் அளவிற்கு செல்வாக்கான மனிதராக உள்ளார். மறுபுறம் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் நள்ளிரவில் கடத்தப்படுகிறார்.  

அவரை தேடும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். கிட்டத்தட்ட ஓராண்டாகியும் அவர் கிடைக்காததால் கௌதம் கார்த்திக் ஏஜிஆர் கும்பலில் ரவுடியாக இணைந்து முதலமைச்சருக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க செல்கிறார். இறுதியில் அவருக்கு என்ன ஆனது? கௌதம் கார்த்திக் அதனை கண்டுபிடித்தாரா என்பதுதான் பத்து தல படத்தின் கதை.

ரீமேக் செய்யாமல்… 

மப்டி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் கதையில் பல மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா.  அதுவே படத்திற்கு பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது.  மற்ற படங்களை காட்டிலும் கௌதம் கார்த்திக் இந்த படத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார், அதிலும் ஆக்சன் காட்சிகளில் கூடுதல் மெனக்கெட்டு நடித்துள்ளார்.  இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.  அவருக்கு ஜோடியாக தாசில்தாராக வரும் பிரியா பவானி சங்கரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  

தூணாக விளங்கிய சிம்பு

துணை முதலமைச்சராக கவுதம் வாசுதேவ் மேனன் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  இந்த படத்தில் ஒரு அரசியல்வாதியாகவே வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். இடைவெளிக்கு சற்று முன்னால்தான் சிலம்பரசனின் என்ட்ரி உள்ளது.  சிம்புவை பார்க்க இந்த படத்திற்கு சென்ற ரசிகர்கள் இதன் மூலம் சிறிது ஏமாற்றம் அடையலாம்.  பின்பு இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சிம்புவே படத்தை தாங்கி பிடிக்கிறார். அவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகளும் பெரிதாக கண்ணை உறுத்தவில்லை. 

ஏஆர் ரகுமான் வழக்கம்போல பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார், சிம்பு படங்கள் என்றாலே சற்று கூடுதலாக கவனம் கொடுத்து இசையமைக்கிறார்.

இது கிட்டத்தட்ட ஒரு அரசியல் கதைய அம்சம் கொண்ட படம் என்பதால் சமீப கால தமிழக அரசியலையும் சற்று தொட்டும் தொடாமலும் பேசி உள்ளனர்.  படம் முழுக்கவே ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளது.  மிக அற்புதமாய் வந்திருக்க வேண்டிய கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டும் படத்தில் இருந்து தனியாக தெரிகிறது.  படம் முழுக்க VFX காட்சிகளும் படுமோசமாகவே இருந்தது. தமிழ் ரசிகர்களுக்காக படத்தில் இவர்கள் செய்த மாற்றங்கள் சரியாக எடுபடவில்லை.  படம் முடிந்து வெளியே வந்தாலும் சாய்ஷாவின் ராவடி பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.