விழுப்புரம் விவகாரம் |  தனிப்பட்ட குடும்ப பிரச்சினையால் நடந்த சம்பவம் – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

விழுப்புரம் விவகாரம் : அது தனிப்பட்ட குடும்ப பிரச்சனை, இடையில் வந்த இஸ்லாமிய நபர் கொலை செய்யப்பட்டதாகவும், சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரத்தில் கஞ்சா போதை நபர்களால் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய பகுதியில் ஜிஆர்பி தெருவை சேர்ந்தவரும், எம்ஜி ரோட்டில் கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர், வல்லரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், ஞானசேகருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தை குடும்பத்திற்கு தருவதில்லை என்றும் சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து 29 .3 .2023 அன்று மாலை ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் தனது தந்தையிடம் இது குறித்து கேட்க பழக்கடைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர் இல்லாததால் அங்கிருந்தவர்களிடம் கேட்டு பிரச்சினை செய்துள்ளார்கள். அப்போது பிரச்சினையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இச்சம்பவத்தில் காயம்பட்ட இப்ராஹீம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, இது தனிப்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறின்போது, அங்கு தடுக்க வந்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்க கூடிய சம்பவம் என்பதை தங்கள் வாயிலாக இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.