சென்னை: ஆளுநருக்கான விருப்புரிமை நிதியில் இருந்து கண்ணுக்குத் தெரியாத கணக்கில் நிதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் விருப்புரிமை நிதி தொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், திடீரென சில மாற்றங்கள் செய்யப்பட்டது குறித்து எனக்கு தகவல் வந்தது. அதுகுறித்து ஆய்வு செய்தேன். 2018-19-ம் ஆண்டில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட விருப்புரிமை நிதிரூ.50 லட்சம் வரை கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டு வந்தது. 2019-20-ல் அதை ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது.
அட்சய பாத்திரா நிறுவனம்: அதன்பின் ஆய்வு செய்தால், அந்த ரூ.5 கோடியில் ரூ.4 கோடியை அட்சய பாத்திரா நிறுவனத்துக்கு தலா ரூ.2 கோடியை 2 தவணைகளாக கொடுத்துள்ளனர். மாநகராட்சியால் ஒப்பந்தம் போட்டதன் அடிப்படையில், பூண்டு, வெங்காயம் சேர்க்காத ஒரு அமைப்பு, அவர்கள்வழியில் செய்யும் ஒரு உணவை, அது சத்துணவு என்று கூற முடியாத நிலையில், அரசு பணத் தில், அரசு இடத்தில் அரசு குழந்தைகளுக்கு வழங்க ஒதுக்கப் பட்டுள்ளது.
மீதமுள்ள ரூ.1 கோடி ‘ஆளுநர்மாளிகை கணக்கு’ என்ற கண்ணுக்குத் தெரியாத கணக்கில் மாற்றப்பட்டுள்ளது. அடுத்தாண்டில் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதில் ரூ.1 கோடியை அட்சய பாத்திராவுக்கு கொடுக்கப்பட்டது. அதன்பின் அந்ததிட்டமே நின்றுபோய் விட்டதாக தெரிகிறது. திட்டத்தை நடைமுறைப்படுத்தவே இல்லை என்கிறார் அமைச்சர்.
மீதமுள்ள ரூ.4 கோடி ஏதேதோ அவர்களுக்கு விருப்பமான செலவுகளில், கூட்டங்களில் வைக்கப்பட்டது. ஆண்டு முடிவில் ரூ.1.88 கோடி அரசு கஜானாவில் வேறு கணக்கில் போடப்பட்டுள்ளது. அந்த தொகைஎங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை. விருப்புரிமை நிதியைஆளுநருக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதாக கொடுத்துள்ளனர். அந்த கணக்கை பார்த்தால், அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா? ஏதோ கட்சி நடத்துபவர்களுக்கு செலவு செய்யப்பட்டதா? என்ற அச்சம் வருகிறது.
ஜனநாயகத்துக்கு விரோதம்: இந்த நிதி மத்திய தணிக்கைத் துறையின் எல்லையை மீறியுள்ளது. கண்ணுக்கு தெரியாத பிரிவுக்கு நிதியை மாற்றுவது தவறு என்று கூறியுள்ளது. இதை அறிந்தபின், தற்போது புதிய விதிமுறைகளுடன், சட்டப்படி செலவழிக்கவேண்டும் என்று கொண்டுவந்துள்ளோம். நிஜமாகவே உணவு கொடுத்த தகவல் இல்லை. இதுபோன்று நிதி அளிப்பது ஜனநாய கத்துக்கு விரோதமானது.
(அப்போது அதிமுக கொறடா எழுந்து பேச வாய்ப்பு கேட்டார்).
பேரவைத் தலைவர் அப்பாவு: அமைச்சர் கூறியதில் ஏதாவது தகவல் இருந்தால் கூறுங்கள்.
எஸ்.பி.வேலுமணி: ஆளுநர் குறித்து அமைச்சர் பேசியது, அவைக் குறிப்பில் இருக்கலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.
(அப்போது எதிர்க்கட்சித்தலை வர் பேச வாய்ப்பு கேட்டார்.)
அமைச்சர் கூறுவதில் தவறில்லை: பேரவைத்தலைவர் அப்பாவு:ஆளுநருக்கு வழங்கப்பட்ட நிதிஅந்தரங்கமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுவதில் தவறில்லை. நீங்கள் தந்த நிதி எதற்கு செலவழிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் தாருங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் அவருக்கான திட்டங்களுக்காக அரசிடம் இருந்து கேட்டதொகை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த தொகையில் இருந்துவழங்கப்பட்டதை நிதியமைச்சர்கூறுகிறார். நானும் ஆளுநரும் சேர்ந்து ஏழைகளுக்கான திட்டத்தை (காலை சிற்றுண்டி திட்டம்) தொடங்கி வைத்துள்ளோம். இதுஏழைகளுக்கானது. ஏழைகளுக்குகொடுத்ததை கொச்சைப்படுத்து கிறீர்களா?
பேரவைத்தலைவர் அப்பாவு:அரசு, முதல்வர், அமைச்சர்களுக்குத் தான் நிதியை கையாள முழுஉரிமை உண்டு. அதை ஆளுநருக்கு கொடுத்து, அவர் அட்சய பாத்திரம் மூலம் யாருக்கோ கொடுப்பதற்கு ஜனநாயக நாட்டில் எந்த உரிமையும் இல்லை. குற்றச்சாட்டுக்கான ஆதாரத்துக்கு நிதியமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: அட்சய பாத்திரம் திட்டம்செயல்படுத்தியதை குறைகூறவில்லை. இந்த நிதியை ஒரு காரணம் கூறி வாங்கி, அந்த காரணத்துக்கு செலவழிக்காமல் வேறு விஷயத்துக்கு செலவழித்தது ஏன்? எந்த துறையும் எந்த தலைப்பிலும் செலவழிக்க கஜானாவில் இருந்து நேரடியாகத்தான் பணம் செல்ல வேண்டும். வேறு கணக்குக்கு அனுப்பக் கூடாது.
வெள்ள நிவாரணத்தில்… தணிக்கை அறிக்கையில் அதிமுக அரசில் வெள்ள நிவார ணமாக ரூ.4 ஆயிரம் கோடி வந்ததில், ரூ.2 ஆயிரம் கோடி வேறு கணக்குக்கு மாற்றப்பட்டு கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
அமைச்சர் துரைமுருகன்: ஆளுநருக்காக நிதி கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் எடுத்து வேறு நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது குறித்து ஆளுநர்தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற் றது.