சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரசூல். இவர் மண்ணடி பகுதியில் அப்துல் சலாம் என்பவரின் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். மூன்று பேர் பங்குதாரர்களாக உள்ள இந்த நிறுவனத்திற்கு கடந்த மாதம் 26-ம் தேதி திருச்சியில் இருந்து 2 கோடி மதிப்புள்ள மூன்று கிலோ தங்கக்கட்டிகள் கொண்டுவரப்பட்டது. இந்த தங்கக்கட்டிகளை ரசூல் கார் ஓட்டுநர் தினேஷ் என்பவருடன் சேர்ந்து எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து இவர்கள் செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் பகுதியில் வரும் போது ஒரு கும்பல் ரசூலை வழிமறித்து தங்கத்தை பறித்து சென்றதாக ரசூல் உரிமையாளர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது நண்பருடன் சம்பவ இடத்திற்குச் சென்று ரசூலை அழைத்து வந்து ஒரு விடுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது ரசூல் நண்பர்களுடன் சேர்ந்து தங்கத்தை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் ரசூலை கடுமையாக தாக்கிவிட்டு பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பித்துச் சென்றனர்.
இது தொடர்பாக உரிமையாளர்கள் கடந்த 1-ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் ரசூலுடன் சேர்ந்து நகை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் மற்றும் 25 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தனது கணவர் 20 நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பாதது குறித்து ரசூலின் மனைவி ஜவகர் நிஷா, உரிமையாளர்களிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, தங்க வியாபாரம் தொடர்பாக ரசூல் தங்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனே நிஷா தனது கணவரை பேச சொல்லுங்கள் என்று கேட்டபோது, வியாபாரத்துக்காக வைத்திருந்த நகைகள் திருட்டு போனது தொடர்பாக சிலரிடம் பேசிக் கொண்டுள்ளோம் என்று சமாளித்துள்ளனர்.
தொடர்ந்து நிஷா உரிமையாளர்களிடம் கணவர் குறித்து கேட்டு் தொல்லை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் உரிமையாளர்கள் ரசூலை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜவகர் நிஷா, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, கடத்தல் தங்கம் வியாபாரம் செய்து வந்த 4 பேரையும் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ரசூலை கடத்தி தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் நான்கு பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரையும் தேடி தேடிவருகின்றனர்.