புதுடில்லி :’பங்குச்சந்தை உட்பட பல இடங்களில் செய்யப்படும் முதலீட்டுத் தொகை, ஆறு மாத அடிப்படை ஊதியத்தை மீறினால், அது குறித்த விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்’ என, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பங்குச் சந்தை உள்ளிட்ட எந்த முதலீட்டு விஷயத்திலும் அதிகாரிகள் யூக வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்ற அடிப்படையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு மாத முடிவில், முதலீடு வர்த்தகத்தின் மொத்த தொகை, இரண்டு மாத அடிப்படை ஊதியத்தை மீறினால், அனைத்து பரிவர்த்தனை குறித்த விபரங்களையும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
பங்குச் சந்தை தரகர்கள் அல்லது முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிற நபர்கள் வாயிலாக அவ்வப்போது செய்யப்படும் முதலீட்டிற்கு இந்த ஏற்பாடு பொருந்தாது.
பங்குகளை அடிக்கடி வாங்குவது, விற்பது, அடிக்கடி முதலீடு செய்வது போன்றவற்றுக்கு இந்த விதி பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.