பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போஸ்டர்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரச்சாரம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாடு முழுவதும் நேற்று போஸ்டர் ஒட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் நேற்று கூறியதாவது. ஆம் ஆத்மி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது. ‘மோடியை அகற்றுவோம் நாட்டைக் காப்போம்’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டு நாட்டின் 22 மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற தகவலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவே இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, ஜனநாயகத்துக்கு முடிவுகட்ட பாஜக முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, வரும் ஏப்ரல் 10-ம் தேதி நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.