ரோம்: சுவாச பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸுக்கு (86) கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பாதிப்பு எதுவும் இல்லை.
அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர் சிகிச்சைக்காக, அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. அவரது சந்திப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் இன்று வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. போப் பிரான்சிஸுக்கு இளம் வயதிலேயே ஒரு நுரையீரலின் பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்பட்டுள்ளது.
ஈஸ்டரில் பங்கேற்பு?
இந்த வார இறுதியில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியை போப் பிரான்சிஸ் கொண்டாடுவதாக இருந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அடுத்த வாரம் நடைபெறவுள்ள புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் நிகழ்ச்சிகளில் போப் பிரான்சிஸ் பங்கேற்பாரா இல்லையா என்பது தெரியவில்லை.